ஆம். டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் டிஇடி தேர்வு பொருந்தும். ஒருதடவை டிஇடி தேறிவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டிஆர்பி தேர்வை முடித்துவிட வேண்டும். ஆனால், டிஇடி முடித்த அடுத்த 5 வருடத்திற்குள் டிஆர்பி தேறவில்லையெனில், மீண்டும் டிஇடி எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர்தான், டிஆர்பி எழுத முடியும். உங்களின் வசதிக்காக, டிஇடி தேர்வைப் பற்றிய விரிவான விபரங்களைத் தருகிறேன்.
ஆசிரியர் பணிக்கு தகுதிபெறுவதற்கு ஒருவர் டிஇடி தேர்வில் கட்டாயம் தேறியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு விதியை வகுத்துள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் விதிமுறையின்படி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், அவரவர்களது பாடத்தில் நடத்தப்படும் தேர்வில் 60 மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது.
எனவே, தனித்தனியாக நியமிக்கப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பாடங்களில் 60 மதிப்பெண்களை எடுத்தால்தான் தேர்ச்சிபெற முடியும்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வானது(டிஎன்டிஇடி), ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகள் அடங்கிய 2 கேள்வித்தாள்களைக் கொண்டது. தங்களின் பாடம் மற்றும் பணி விருப்பத்திற்கேற்ப, ஏதேனும் ஒரு தாளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பணியை செய்ய விரும்பினால், கேள்வித்தாள் 1-ஐ தேர்ந்தெடுக்கவும். அதேசமயம், 6 முதல் 8ம் வகுப்பு வரை எடுக்க விரும்பினால் கேள்வித்தாள் 2-ஐ தேர்வுசெய்யவும். அதேசமயம், 1 முதல் 8ம் வகுப்பு வரை எடுக்க விரும்பினால், இரண்டு தாள்களையும் எழுதலாம்.